அம்பாந்தோட்டையில் சீன முதலீட்டாளர்களுக்கு சிறப்பு வலயம் – கதவைத் திறக்கிறது சிறிலங்கா
அம்பாந்தோட்டையில் சீன முதலீட்டாளர்களுக்காக சிறப்பு வலயம் ஒன்றை உருவாக்க, சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, சிறிலங்கா முதலீட்டுச் சகையின் தலைவர் உபுல் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
சீனாவின் சின்ஹூவா செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சீன முதலீட்டாளர்களுக்காக, அம்பாந்தோட்டையில் சிறப்பு வலயம் ஒன்றை அமைக்கும் முடிவு குறித்து சிறிலங்கா அரசாங்கம், சீனாவுக்கு தகவல் பரிமாறியுள்ளதாகவும், தற்போது சீனாவின் பதிலுக்காக அரசாங்கம் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“அம்பாந்தோட்டையில் முதலீடுகளை மேற்கொள்ள சீனர்களுக்கான கதவைத் திறந்து விட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அம்பாந்தோட்டையில் ஏற்கனவே, துறைமுகம் மற்றும் அனைத்துலக விமான நிலையம் என்பன உள்ளதால், சீன முதலீட்டுக்கான சிறந்த இடமாக அதனை நாம் கருதுகிறோம்.
சீனா இங்கு வருவதற்கு இது சரியான நேரம். செலவுகள் குறைவு என்பதால் மலிவாக கிடைக்கும்.
இந்த பிராந்தியத்திலேயே ஏனைய இடங்களை விட, ஊதியம், மற்றும் வணிகத்துக்கான செலவினம் என்பன இங்கு குறைவாகவே உள்ளது.
எனவே, சீன முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
சீன- சிறிலங்கா உறவுகள் இப்போது மிகவும் உச்சத்தில் இருக்கின்றன. சிறிலங்கா முதலீட்டுச் சபை, சீனா முதலீட்டாளர்களுடன் இணைந்து செயற்படுகிறது.
அண்மைக்காலத்தில் சிறிலங்காவில் சீனாவின் நலன்கள் அதிகமாகவே உள்ளது. நாம் அவர்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறோம்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டப்பணிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் தொடங்கும் என்று உறுதியாக கூறுகிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.