அரசியல் கைதிகளின் விடுதலைக்காய் தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்தான் மாணவன்
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவர் தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
கோண்டாவில் தொடருந்து நிலையத்துக்கு அருகில் இன்று காலை 7.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் கலைப்பிரிவில் கல்வி கற்கும் கோப்பாயைச் சேர்ந்த இராஜேஸ்வரன் செந்தூரன் (வயது -18) என்ற மாணவரே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்த மாணவன், உயிரிழக்க முன்னர் எழுதி வைத்துள்ள கடிதத்தில்,
“தமிழீழ விடுதலையைக் கொடு, ஒளியூட்டு”
“அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி’ நல்லாட்சி அரசாங்கம் அனைத்து அரசியல் கைதிகளையும் (political prisoners) புனர்வாழ்வளித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
மேலும் “ஒரு தமிழ் அரசியல் கைதிகளேனும் சிறையில் இருக்க முடியாது. இந்த அரசியல் கைதிகளை உடனடியாக (immediately) விடுதலை செய்ய வேண்டியதன் அவசியம் எனக்குப் புரிந்தும்கூட (understand) இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு இன்னமும் புரியவில்லையே என்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது.
The goverment must deliver all tamil political prisoners immediately.
என்றும் தமிழ் உறவுகளை உயிராய் நேசிக்கும்
உண்மையுள்ள செந்தூரன்”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தின் கீழ், தனது சுயவிபரத்தையும் மாணவன் எழுதி வைத்துள்ளார்.
இந்தச் சம்பவம் கல்விச் சமூகத்திலும், யாழ். குடாநாட்டு மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்னும் என் சகோதரத் தேசிய இனத்தின் உயிரழிப்பைத் தடுத்துநிறுத்தத் துப்பில்லையே.. வெட்குகிறேன்.. வேதனையில்.. நிற்குமோ இத்துயரம்!? நிமிருமோ என்றெமதினம்!