திறைசேரி செயலாளரை பதவி நீக்கும் திட்டம் இல்லையாம்
திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவை பதவியிலிருந்து நீக்குவது குறித்து அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என, தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
அவரைப் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக அரசாங்கத்திற்குள் எந்த உள் விவாதங்களும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் டொலர் திறைசேரி பணம், இணைய உடுருவிகளால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, திறைசேரி செயலாளரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி வினவப்பட்ட போதே, நிகால் அபேசிங்க இதனைத் தெரிவித்தார்.
அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அமைச்சரவைக்குள் இருந்து கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
