நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சியை ஒழிக்கும் அமைச்சரவைப் பத்திரம் நாளை சமர்ப்பிப்பு
நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்கும், புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தும், சிறப்பு அமைச்சரவைப் பத்திரத்தை நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு, இரட்டை குடியுரிமையை வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய போதெ, நாளை நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்கும், புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தும், சிறப்பு அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.
பொதுவேட்பாளராக போட்டியிட்ட போது, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழித்தல், புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துதல் ஆகிய இரண்டு முக்கிய வாக்குறுதிகளையும் மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார்.
ஆட்சிமாற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்த, மாதுளுவாவே சோபித தேரரின் இறுதிச் சடங்கில் உரையாற்றிய போது, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்கவும், புதிய தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.