மேலும்

அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார் சமந்தா பவர்

Samantha_Powerநியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான, தூதுவர் சமந்தா பவர் அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது அவர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவா தீர்மானத்தை  நிறைவேற்றுவது தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக- குறிப்பாக போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் குறித்து- ஆராய்வதற்கே இவர் சிறிலங்கா வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் யாழ்ப்பாணத்துக்கும் சென்று நிலைமைகளை ஆராய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவரான சமந்தா பவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முக்கியமான ஒருவராவார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ள அமெரிக்க அதிகாரிகளில் இவர் முக்கியமானவர்.

சிறிலங்காவுக்கு எதிரான ஜெனிவா தீர்மானங்களில் இவர் கணிசமான பங்களிப்பை செய்தவர்.

இவர், 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்கனவே சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன் போது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து, போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

அதற்கு மகிந்த ராஜபக்ச எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்காத நிலையிலேயே சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானங்கள் ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டன.

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து கடந்த மே மாதம், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அதையடுத்து, சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும், இரண்டாவது அமெரிக்க உயர்நிலைப் பிரதிநிதி சமந்தா பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *