நோர்வேயில் குணா. கவியழகனின் ‘விடமேறிய கனவு’ அறிமுக அரங்கு
“நஞ்சுண்டகாடு” குணா கவியழகனின் இரண்டாவது நாவலான ‘விடமேறிய கனவு’ அறிமுக அரங்கு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது.
இம்மாதம் 14ஆம் நாள், சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஒஸ்லோவின் Linderud பாடசாலை மண்டபத்தில் (Statsråd Mathiesens vei 27, 0594 Oslo) தமிழ் 3 வானொலியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள நூல் அறிமுக அரங்கில், எழுத்தாளர் குணா கவியழகன் நேரடியாகப் பங்கேற்கிறார்.
ஊடகவியலாளர் ரூபன் சிவராஜா தலைமையில் நடைபெறவுள்ள நூல் அறிமுக நிகழ்வில் எழுத்தாளரும் விமர்சகருமான யமுனா ராஜேந்திரன், கலாநிதி சர்வேந்திரா தர்மலிங்கம், கவிஞர் கவிதாலட்சுமி, எழுத்தாளர் சஞ்சயன் செல்வமாணிக்கம் ஆகியோர் நூல் பற்றிய கருத்துரைகளை ஆற்றவுள்ளனர்.
குணா கவியழகனின் முதல் நாவல் ‘நஞ்சுண்டகாடு’ 2014இல் வெளியாகி பரவலான அவதானிப்பினைப் பெற்றது. தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான படைப்பாளியாகக் குணா கவியழகன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
அவருடைய இரண்டாவது நாவலான ‘விடமேறிய கனவு’ இந்தஆண்டின் நடுப்பகுதியில் வெளியாகியிருக்கிறது. கனடா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் தமிழகத்திலும்அதன் அறிமுக நிகழ்வுகள் நிகழ்ந்தேறியுள்ளன.
ஒஸ்லோவில் இடம்பெறவுள்ள இந்தநூல் அறிமுக அரங்கில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டி நிற்பதாகத் தமிழ் 3 வானொலி தெரிவித்துள்ளது.