சிறிலங்கா இராணுவத்தின் சினைப்பர் அணியின் முன்னாள் சிப்பாய் மாலைதீவில் கைது
சிறிலங்கா இராணுவத்தில் சினைப்பர் தாக்குதல் அணியில் இருந்த, முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளார். மாலைதீவில் உள்ள ஹிபிஹாட்டூ தீவில் பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில், துப்பாக்கிகள், குறிபார்த்துச் சுடும் துப்பாக்கிக்குரிய ரவைகளும் அடங்கியுள்ளன.
இந்த நிலையில், சிறிலங்கா இராணுவத்தின் குறிபார்த்துச் சுடும் (சினைப்பர்) அணியில் இடம்பெற்றிருந்த, முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒரு மாலைதீவு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மாலைதீவை விட்டு வெளியேற முயன்ற போது கடந்தவாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இது தொடர்பான தகவல்களை மாலைதீவு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
கடந்த செப்ரெம்பர் மாதம் மாலைதீவு அதிபர் பயணம் செய்த படகில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
அதையடுத்து, மாலைதீவு அதிபரை கொல்ல முயன்ற குற்றச்சாட்டில், அந்த நாட்டின் துணை அதிபர் அகமட் அதீப் கைது செய்யப்பட்டார்.
அவரது கூட்டாளியான , 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டு மாலைதீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்தப் பின்னணியில், சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த முன்னாள் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.