மர்மப்பொருள் அம்பாந்தோட்டைக்கு அப்பால் கடலிலேயே விழும் – ஆர்தர் சி கிளார்க் மையம்
விண்வெளியில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும், விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப்படும், WT1190F எனப் பெயரிடப்பட்டுள்ள, மர்மப்பொருள், அம்பாந்தோட்டைக்கு அப்பால் 100 கி.மீ தொலைவில் கடலிலேயே விழும் என்று ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது.
இந்த மையத்தின் விஞ்ஞானி ஒருவர் இதுகுறித்து தகவல் வெளியிடுகையில்,
“இந்த மர்மப்பொருள், ஆழ்கடல் பகுதியிலேயே விழும் என்று பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த மர்மப் பொருள் விழப் போகும் சரியான இடத்தை இப்போது கூற முடியாது. அது பூமியில் விழுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான், விழப்போகும் சரியான இடத்தை உறுதிப்படுத்த முடியும்.
அது நிலத்தில் விழுமென்றால் மட்டுமே, அச்சம் கொள்ள வேண்டும். புவி சுற்றுப்பாதைக்குள் அது நுழையும் போது எரியத் தொடங்கும். எரியும் துண்டுகள் நிலத்தில் விழுமாக இருந்தால் அது ஆபத்தானது.” என்று தெரிவித்துள்ளார்.
வரும் நொவம்பர் மாதம், 13ஆம் நாள் ஜிஎம்ரி நேரப்படி காலை 6.15 மணியளவில், இந்த மர்மப்பொருள், சிறிலங்காவுக்கு தெற்கே 65 கடல் மைல் தொலைவில் கடலில் விழும் என்று வானியல் நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.