திறந்த அரசுகளின் கூட்டமைப்பில் இணைந்தது சிறிலங்கா
திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பில் (Open Government Partnership) சிறிலங்காவும் புதிய உறுப்பினராக இணைந்து கொண்டுள்ளது. மெக்சிகோவில் நேற்று முன்தினம் ஆரம்பமான திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பில், சிறிலங்கா இணைந்து கொள்வதாக, சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அறிவித்தார்.
வெளிப்படையான, கூடுதல் பொறுப்புக்கூறும், குடிமக்களுக்குப் பதிலளிக்கும் வகையிலான உள்நாட்டு மறுசீரமைப்பை மேற்கொள்ள உறுதி பூண்டுள்ள நாடுகளைக் கொண்டதாக, இந்த வெளிப்படையான அரசாங்கங்களின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு 8 நாடுகளால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் 66 நாடுகள் அங்கம் வகித்த நிலையில், சிறிலங்கா 67 ஆவது நாடாக இணைந்திருக்கிறது.
இந்தக் கூட்டமைப்பில் இணைந்திருக்கும் முதலாவது தெற்காசிய நாடு சிறிலங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோவில் நடக்கும், இந்த அமைப்பின் மாநாட்டில் சிறிலங்காவின் சார்பில், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் அமெரிக்க குழுவுக்குத் தலைமை தாங்கும், ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவருடன், சிறிலங்கா குழுவினர் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய சமந்தா பவர், சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறியுள்ளதுடன், மகிந்த ராஜபக்ச ஆட்சி குறித்து கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.