யோசித ராஜபக்ச குறித்த விசாரணை அறிக்கையை மூடிமறைக்கிறது பாதுகாப்பு அமைச்சு
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப். யோசித ராஜபக்ச, தொடர்பான விசாரணை அறிக்கையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மூடிமறைப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
சிறிலங்கா கடற்படையில் இருந்த போது, லெப்.யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையின் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மகிந்த ராஜபக்ச சிறிலங்கா அதிபராக இருந்த போது, அவரது பாதுகாப்பு அதிகாரியாக யோசித ராஜபக்ச பணியாற்றியிருந்தார்.
இதுதொடர்பாக சிறிலங்கா கடற்படையின், ரியர் அட்மிரல் வெட்டவா தலைமையிலான குழு விசாரணைகளை நடத்தி, அதுதொடர்பான அறிக்கையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிடம் கையளித்திருந்தது.
எனினும், இந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
யோசித ராஜபக்ச தொடர்பான விசாரணை அறிக்கை பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதை, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் இந்திக டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் கருத்தை அறிய, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியை தொடர்பு கொண்ட போது, தாம் வெளிநாடு செல்லவுள்ளதாகவும், நாடு திரும்பியதும் இதுகுறித்துப் பதிலளிப்பதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழிடம் தெரிவித்துள்ளார்.