மேலும்

புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சியே அதிபர் மாளிகையில் பதுங்குகுழி அமைத்தோம் – மகிந்த ராஜபக்ச

Mahinda-Rajapaksaஅதிபர் மாளிகையில், தாம் நிலத்தடி சொகுசு மாளிகையை அமைக்கவில்லை என்றும், அது விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்காக அமைக்கப்பட்ட பதுங்குகுழி என்றும், அதுபோன்ற பதுங்கு குழி அலரி மாளிகையிலும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

நாரஹேன்பிட்டிய விகாரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியி அவர்,

”அதிபர் மாளிகையில் இரகசிய நிலத்தடி மாளிகை ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இது மாளிகை அல்ல. நாம் அமைத்தது பதுங்குகுழி.

பதுங்குகுழி ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவிப்பதை நான் மறுக்கவில்லை. அது போர்க்காலகட்டத்தில் அமைக்கப்பட்ட பதுங்குகுழி.

விடுதலைப் புலிகளின் தரப்பு பலமடைந்திருந்த காலகட்டத்தில் எம்மை பாதுகாக்க வேண்டிய தேவை இருந்தது.

அந்த நேரத்தில் முக்கிய பாதுகாப்பு கலந்துரையாடல்களையும் முக்கிய தீர்மானங்களையும் நாம் அதிபர் மாளிகையில் தான் மேற்கொள்வோம்.

அவ்வாறு இருக்கையில் அதிபர் மாளிகை தாக்கப்பட்டால் இந்த பதுங்குழியில் இருந்து செயற்படலாம் என்ற நோக்கத்துக்காகவே இதை உருவாக்கினோம்.

இந்த பதுங்குகுழியை வெளியில் இருந்து பார்க்கும் போது சாதாரண வீடு போன்று தெரியும். ஆனால் உள்ளே பாதுகாப்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

போர்க்காலகட்டத்தில் இதை நாம் அமைத்தோம். அப்போதைய சூழ்நிலையில் புலிகளின் தாக்குதல் மிகவும் கடுமையானதாக இருந்தது.

விமான தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டனர். அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள எமக்கு இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி இருந்தது.

அவர்களின் விமான தாக்குதல் மற்றும் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் என்பன எமக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராக இருந்தோம்.

அதிபர் மாளிகையில் மட்டுமல்ல அலரி மாளிகையிலும் இவ்வாறான பதுங்குகுழி உள்ளது. இன்னும் சில முக்கிய இடங்களிலும் பதுங்குகுழிகள் உள்ளன. அவற்றை அமைத்தது தவறென குறிப்பிட முடியாது.

நாம் தாக்குதல் நடத்தும்போது புலிகள் பதுங்குகுழி அமைத்தனர். அதேபோல் அவர்கள் தாக்கும் போது நாம் பதுங்குகுழி அமைத்தோம்.

புலிகளின் தலைவர் பிரபாகரனும் இவ்வாறு பதுங்குகுழிகளை அமைத்து வைத்திருந்தார். இராணுவத் தாக்குதலில் இருந்து தப்பிக்க அவர் வீட்டின் அடியில் பதுங்குகுழியை அமைத்திருந்தார். அதை எவரும் விமர்சிக்கவில்லை.

அதேபோல நாமும் எமது பாதுகாப்பிற்காக பதுங்குகுழியை அமைத்துக் கொண்டோம். புலிகள் செய்வது நியாயமெனின் நாம் செய்வதும் நியாயமானதே.

அவ்வாறு செய்யாமல் நான் இறக்க வேண்டும் என் நினைக்கிறீர்களா? முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற எதிர்பார்க்கக் கூடாது.

புலிகளின் விமானங்கள் கொழும்பில் வந்து தாக்குதல் நடத்தியது இளையவர்கள் பலருக்கு மறந்து விட்டது.

பதுங்குகுழி அமைக்க எவ்வளவு செலவானது என்ற எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களும் அமைத்தனர், நாங்களும் அமைத்தோம் அவ்வளவு தான்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *