மேலும்

பிள்ளையானின் சகா பிரசாந்தனும் கைது – இரட்டைப் படுகொலை வழக்கில் சிக்கினார்

prasanthan_tmvpகிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலருமான பூ.பிரசாந்தன், இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு டிசெம்பர் 13ஆம் நாள் ஆரையம்பதியில் வைத்து, 2008 ஆசிரியரான கிருஸ்ணபிள்ளை மனோகரன் மற்றும் அவரது மனைவி தயாளினி ஆகியோர் வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் சகோதரி அளித்த முறைப்பாட்டின் பேரிலேயே, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலரான பூபாலபிள்ளை, பிரசாந்தன், சிறிலங்கா காவல்துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக, ஏற்கனவே காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போதிலும், எவரும் கைது செய்யப்படவில்லை.

தற்போது கிடைத்துள்ள புதிய தகவல்களை அடுத்து, பூ.பிரசாந்தனைக் கைது செய்துள்ள சிறிலங்கா காவல்துறை அவரது சகோதரனையும் தேடி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *