போர்க்குற்ற விசாரணைக்கு உதவ ஜப்பானிய நீதிபதி கொழும்பு வருகை
போர்க்குற்ற விசாரணைக்கு உதவுவதற்காக ஜப்பானிய நீதிபதி மோட்டூ நுகுசி வந்திருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில், உரையாற்றிய அவர், “உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு ஜப்பான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் அனைத்துலக நிபுணத்துவம் பெற்றவரும், கம்போடியாவில் போர்க்குற்றங்களை விசாரித்த நீதிபதியுமான மோட்டூ நுகுசியின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு, ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபே என்னிடம் கூறியிருந்தார்.
நீதிபதி மோட்டூ நுகுசி, ஏற்கனவே காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கும் உதவியிருந்தார்.
இதற்காக, மோட்டூ நுகுசியின் ஒத்துழைப்பை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவே கோரியிருந்தார்.
அதற்காக முன்னாள் அதிபருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றும் அவர் தெரிவித்தார்.