இன்று சிறிலங்கா வருகிறார் ஐ.நா உதவிச்செயலர்
அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் மிரோஸ்லாவ் ஜென்கா, சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும், 25ஆம் நாள் வரை அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்துக்காக அண்மையில் நியூயோர்க் சென்றிருந்த சிறிலங்கா அதிபருடன், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நடத்திய பேச்சுக்களை அடுத்தே, அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா உதவிச் செயலர் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்கிறார்.
சிறிலங்கா அதிகாரிகள் மற்றும் பங்காளர்களுடனான தொடர்ச்சியான கலந்துரையாடலுக்கு, ஐ.நா உதவிச் செயலரின் இந்தப் பயணம் வாய்ப்பை வழங்கும் என்றும், சிறிலங்காவுக்கு உதவும் வகையிலான,நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான திட்டம் குறித்து தெரிவிப்பதற்கான சந்தர்ப்பமாகவும் இந்தப் பயணம் அமையும் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது.
ஐ.நா உதவிச்செயலர் மிரோஸ்லாவ் ஜென்கா, சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, வரும் 24ஆம் நாள் கொழும்பில் நடக்கவுள்ள ஐ.நா நாள் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.