மேலும்

போர்க்குற்ற விசாரணைகளில் அனைத்துலக நீதிபதிகள் இடம்பெற வேண்டும் – பரணகம ஆணைக்குழு

warcrimeசிறிலங்காவில் போரின் போது, போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தியுள்ள  மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழு, எந்தவொரு போர்க்குற்ற விசாரணையும் அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்புடன் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் 178 பக்க அறிக்கையிலேயே இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கு அனைத்துலக நீதிபதிகள் பங்கேற்க வேண்டும் என்றும், ஆணைக்குழு அதனை ஊக்குவிப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, முற்றிலும் உள்நாடடு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறை ஏற்படுத்தப்பட்டால்,  வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையேனும் அதில் உள்வாங்க வேண்டும் என்றும் பரணகம ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களை சிறிலங்கா அரசாங்கம் பகிரங்மாக ஏற்றுக்கொண்டு, உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமை ஒன்றை உருவாக்க வேண்டும்.

குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு, மன்னிப்பு வழங்கியோ அல்லது தண்டனை விதித்தோ குற்றங்கள் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையிலும், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க, அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்புடன் கூடிய நம்பகமான கலப்பு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவும், அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *