பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையால் சிறிலங்கா அரசாங்கத்துக்குள் பிளவு?
காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்கும், மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கையால் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்துக்குள் பிளவுகள் ஏற்படலாம் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட உடலகம ஆணைக்குழுவின் அறிக்கையையும், பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையையும் இந்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
காணாமற்போனோர் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அரசியல்வாதிகளின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாலேயே அதனை நாடாளுமன்றத்தில் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாதமமின்றி இந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று சிறிலங்கா அதிபரிடம் கோர வேண்டும் என்றும், காணாமற்போன சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் எத்தகைய பொறுப்பில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணிலுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஆனால், இந்த அறிக்கையை வெளியிடக் கூடாது என்றும், அது கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிறிலங்கா அதிபரிடம் வலியுறுத்தி வருவதாகவும், கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பரணகம ஆணைக்குழுவின் மீது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றும் இதனைக் கலைத்து விட்டு, நம்பகமான ஒரு அமைப்பிடம் இந்த விசாரணைகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.