பரணகம ஆணைக்குழு கலைக்கப்படும் – சிறிலங்காவின் நீதியமைச்சர் தகவல்
காணாமற்போனோர் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட, மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழு கலைக்கப்படும் என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த ஆணைக் குழுவின் மீது அனைத்துலக சமூகத்துக்கு நம்பிக்கையில்லை. எனவே. இந்த ஆணைக் குழு கலைக்கப்படும்.
உள்நாட்டிலும் கூட பெரும்பாலான மக்கள் இந்த ஆணைக்குழு தொடர்பாக மகிழ்ச்சியடையவில்லை. அதன் செயல்முறைகளின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
எவ்வாறாயினும் அதன் செயல்முறைகளை நாம் கைவிடப் போவதில்லை. இன்னும் காத்திரமானதொரு ஆணைக்குழுவை அமைப்போம்.
மேலும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற ஐ.நாவின் முன்மொழிவையும் நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி விட்டு, அனைத்துலக தரம் வாய்ந்த இன்னும் பொருத்தமான ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்த ஐ.நா கோரியுள்ளது, அதுபற்றி ஆராய்ந்து வருகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் பரணகம ஆணைக்குழு மீது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றும், அதனைக் கலைத்து விட்டு, அதன் செயற்பாடுகளை பொருத்தமான ஒரு அமைப்பிடம் கையளிக்க வேண்டும் என்றும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,