மகிந்தவைக் கண்டு ஊடகங்கள் இன்னமும் அஞ்சுகின்றன – அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மீது ஊடகங்கள் இன்னமும் அச்சம் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல.
கண்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“மனித உரிமைகள் குறித்து உள்நாட்டு விசாரணைகளை நடத்த முதலில் இணங்கியவர் மகிந்த ராஜபக்ச தான் என்று, ஒரு நாளிதழுக்கு அளித்திருந்த செவ்வியில் நான் குறிப்பிட்டிருந்தேன். அந்த நாளிதழ் செவ்வியின் அந்தப் பகுதியைப் பிரசுரிக்கவில்லை.
மகிந்த ராஜபக்சவின் பெயரைக் குறிப்பிட்ட போது, சில ஊடகவியலாளர்கள், அவருக்கு எதிராக எதையும் கூறவோ, பிரசுரிக்கவோ பயப்படுவதாகத் தெரிவித்தனர்.
2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்காவுக்கு வந்திருந்த ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம், உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்வதாக மகிந்த ராஜபக்ச இணங்கியிருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.