சிறிலங்காவின் உள்நாட்டு செயல்முறைக்கு ஜப்பான் ஆதரவு
போருடன் தொடர்புடைய விவகாரங்களுக்கு, உள்நாட்டு செயல்முறைகளின் மூலம் தீர்வு காண்பதற்கு, சிறிலங்காவுக்கு ஜப்பான் ஆதரவளிப்பதாக, சிறிலங்கா பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் பியூமியோ கிஷிடாவை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன் போது அனைத்துலக சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கான முயற்சிகளை சிறிலங்கா மேற்கொண்டுள்ளதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் நெருங்கிய நண்பன் என்ற வகையில், புதிய நாட்டை உருவாக்க சிறிலங்காவுக்கு ஜப்பானிய அரசாங்கம் உதவி வழங்கும்.
சிறிலங்கா பிரதமரின் இந்தப் பயணத்தின் மூலம், எமது உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று நம்புவதாகவும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
ஐ.நா பாதுகாப்புச் சபையில ஜப்பான் நிரந்தர உறுப்பு நாடாவதற்கு சிறிலங்கா முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று, சிறிலங்கா பிரதமர் இதன்போது உறுதியளித்துள்ளார்.