போர்க்குற்ற விசாரணையை உள்ளகப் பொறிமுறையே நடத்துமாம் – சிறிலங்கா அதிபர் கூறுகிறார்
போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவது உள்நாட்டு பொறிமுறையாகவே இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
நியூயோர்க் ரைம்ஸ் நாளிதழுக்கு, மிட்டவுண் மன்ஹாட்டன் நகரில் தங்கியிருந்த விடுதியில் வைத்து கடந்த புதன்கிழமை அளித்த செவ்வியிலேயெ அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“போர்க்குற்ற நீதிமன்றம் குறித்து திறந்த மனதுடன் இருப்பேன். அது நிச்சயம் சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும்.
மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகளுடன் கவனமாக ஆலோசனை நடத்திய பின்னரே, போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கப்படும்.
அனைத்துலக சமூகத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாட்டைத் தான் நான் பொறுப்பெடுத்தேன்.
அனைத்துலக சமூகத்தை வெற்றி கொள்வது தான் நான் எதிர்கொண்ட பிரதான சவால். இந்த முயற்சிகள் பயனுடையதாக இருக்கும் என்று நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா நீதிமன்றங்களில் வெளிநாட்டு சட்டவாளர்கள் வாதிடுவதற்கு அனுமதிக்க முடியாது என்று, மைத்திரிபால சிறிசேனவின் உதவியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பில் திருத்தம் செய்யாமல், புதிய அனைத்துலக நீதிமன்றம் ஒன்றை அமைப்பது சாத்தியமில்லை. இது அரசியல் ரீதியாக மிகவும் சிக்கலானது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.