ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்தார் மங்கள சமரவீர
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன், சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத ஆரியசிங்க, கிழக்கு மாகாண ஆளுநரும், சிறிலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகருமான ஒஸ்ரின் பெர்னான்டோ, வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரும், வெளிவிவகார அமைச்சில் ஐ.நா பிரிவுக்கான பணிப்பாளருமான மகேஷினி கொலன்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன் போது, குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை நடத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத் வாக்குறுதியை அவர்கள் மீள உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு அழைப்பு விட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.