சிறிலங்கா அதிபர் பாதுகாப்பு பிரிவு வாகனம் விபத்து – 4 அதிகாரிகள் பலி
மினுவாங்கொட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில், சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பு – மினுவாங்கொட வீதியில், மிரிஸ்வத்த என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிபர் பாதுகாப்புப் பிரிவின் டிபென்டர் வாகனம் ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றை முந்திச்செல்ல முயன்றபோது, எதிரே வந்த மற்றொரு பேருந்துடன் மோதியது.
இரண்டு பேருந்துகளுக்கும் இடையில், அதிபர் பாதுகாப்புப் பிரிவின் டிபென்டர் வாகனம் சிக்கிக் கொண்டதால், இரு அதிகாரிகள் அந்த இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவர் பின்னர் மரணமாகினர். உயிரிழந்த நால்வரில் ஒருவர் பெண் அதிகாரியாவார்.
மேலும் 6 அதிகாரிகள் படுகாயமடைந்த நிலையில், கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.