மேலும்

மங்கள சமரவீர தலைமையில் இன்று ஜெனிவா விரைகிறது சிறிலங்கா அரச குழு

mangala-samaraweeraஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான அரசதரப்புக் குழு இன்று ஜெனிவா பயணமாகவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 14ஆம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில், வரும் 30ஆம் நாள் சிறிலங்கா தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது, சிறிலங்கா தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும்.

இந்த விவாதம் சுமார் மூன்றரை மணிநேரம் இடம்பெறும் என்ற ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்குவதற்கு,  சிறிலங்காவுக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை வலுப்படுத்துவதற்கும், சிறிலங்கா அரசதரப்பின் உயர்மட்டக்குழு இன்று பயணமாகவுள்ளது.

மங்கள சமரவீர தலைமையிலான இந்தக் குழுவில் சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவும் இடம்பெறுகிறார். மேலும், வெளிவிவகார அமைச்சு, நீதி அமைச்சு அதிகாரிகளும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இன்று ஜெனிவா செல்லும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அங்கு இராஜதந்திரிகளுடன் தீவிர சந்திப்புகள், பேச்சுக்களை மேற்கொண்ட பின்னர், புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியாவுக்கான முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்வதற்காகவே அவர், எதிர்வரும், 15ஆம் நாள் புதுடெல்லி செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *