புதனன்று சிறிலங்காவின் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்
சிறிலங்காவின் புதிய கூட்டு அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வரும் செப்ரெம்பர் 9ஆம் நாள்- புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
அதிபர் செயலகத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக, இன்னமும் பதவியேற்காதுள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 4 அமைச்சர்களும், ஐதேகவின் ஒரு அமைச்சரும், நாளை பதவியெற்கவுள்ளனர்.
இதனிடையே, இம்முறை அமைச்சரவையில் இடம்பெறும், 48 அமைச்சர்களில், 12 புதிய துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்பின் போது, 12 புதிய அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெருநகர, மலையக, கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, பொது முயற்சி அபிவிருத்தி, மேல் மாகாண, தென்மாகாண, வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுகள், அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வர்த்தக, நிபுணத்துவ அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி, பல்கலைக்கழக கல்வி மற்றும் தேசிய கலந்துரையாடல் அமைச்சுக்களே புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.