ஐ.நா அறிக்கை கிடைக்க முன்னரே பதிலளிக்கும் குழுக்களைத் தயார்படுத்தியது சிறிலங்கா
சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை இன்னமும், அரசாங்கத்துக்குக் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
”ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை கடந்த மாத இறுதியில் சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இன்னமும் அது அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையின் முற்பிரதி அடுத்த வாரம் சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த அறிக்கை கிடைத்தவுடன் அதற்குப் பதிலளிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, சிறிலங்கா அரசாங்கத்தினால் இரண்டு குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா விசாரணை அறிக்கை இம்மாத இறுதியில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது.
அதில் சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் பதிலளிப்பதற்காகவே, அதிபர் செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு சார்பில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.