சிறிலங்கா கடற்படையுடன் அவுஸ்ரேலிய போர்க்கப்பல் கூட்டுப் பயிற்சி
சிறிலங்கா கடற்படையின் போர்க்கப்பல்களுடன் இணைந்து அவுஸ்ரேலியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று, கொழும்பில் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.
ஐந்து நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்த அவுஸ்ரேலியக் கடற்படையின், மெல்பேர்ன் என்ற போர்க்கப்பலே, கொழும்புத் துறைமுகத்துக்கு அப்பால் நேற்று இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றது.
சிறிலங்கா கடற்படையின் சார்பில், சமுத்ர, சாகர ஆகிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றிருந்தன.
இருநாடுகளின் கடற்படைகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும், சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் ஒத்துழைத்துச் செயற்படும், நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெற்றதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.