கோத்தா, துமிந்த மற்றும் இரு முன்னாள் இராணுவ அதிகாரிகளிடம் 3 மணிநேரம் விசாரணை
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவினால், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று 3 மணிநேரம் விசாரிக்கப்பட்டார்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு, இன்று கோத்தாபய ராஜபக்சவுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளான மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல, மேஜர் ஜெனரல் பாலித பெர்னான்டோ ஆகியோரையும் விசாரணைக்கு அழைத்திருந்தது.
இந்த நால்வரிடமும் இன்று 3 மணிநேரம் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும், மீண்டும் நாளை விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் ஆணைக்குழுவின் செயலர் லஸ்லி டி சில்வா தெரிவித்தார்.
கடந்த ஜனவரிமாதம் நடந்த அதிபர் தேர்தலின் போது ரக்ன லங்கா நிறுவனத்தின் பணியாளர்களை தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்தியது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாகவே இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.