எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் – சபாநாயகர் அறிவிப்பு
சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய சற்று முன்னர் இதனை சபையில் அறிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அமர்வு இன்று காலை ஆரம்பமான போது, புதிய எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை என்றும் அவர் அறிவித்தார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் இரண்டாவது தமிழர் இரா. சம்பந்தன் ஆவார்.
1977ஆம் ஆண்டு தொடக்கம் 1983ஆம் ஆண்டு வரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.