எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு? – இன்று முடிவு அறிவிப்பு
சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில், புதிய எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளியிடவுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள ஒரு பிரிவினர் குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைசவராக நியமிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இதன் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான விவகாரம் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
16 ஆசனங்களைக் கொண்ட கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படக் கூடாது என்று இனவாத சக்திகள் பரப்புரை செய்து வருகின்றன.
அதேவேளை, இந்தப் பதவிக்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு பகுதியினர் கோரவுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதனால் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் இன்று சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே எதிர்கட்சித் தலைவராக அறிவிக்கப்படுவார் என்றும், இரு பிரதான கட்சிகளுக்கு இடையிலும் இதுபற்றிய இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.
சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும் என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே கூட்டமைப்பு குழுக்களின் பிரதித் தலைவர் பதவியை ஏற்க முடிவு செய்ததாகவும் அந்த தகவல் மேலும் தெரிவித்தது.