புலிகளுடனான பேச்சுக்குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் சிறிலங்கா இராணுவ அதிகாரி மரணம்
சந்திரிகா அரசாங்கத்தின் சார்பில் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்திய சிறிலங்கா அரசாங்க குழுவில் இடம்பெற்றிருந்த சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான மேஜர் ஜெனரல் சிறி பீரிஸ் கடந்த 3ஆம் நாள் மரணமானார்.
1994ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க சிறிலங்காவின் அதிபராகப் பதவியேற்ற பின்னர் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்த அரசாங்க குழுவை யாழ்ப்பாணம் அனுப்பியிருந்தார்.
பாலபெத்தபென்டி தலைமையிலான இந்தக் குழுவில், சிறிலங்கா அரசாங்க மற்றும் இராணுவ கடற்படை அதிகாரிகளே இடம்பெற்றிருந்தனர்.
விடுதலைப் புலிகளின் சார்பில் அப்போதைய அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.
யாழ். சுண்டுக்குழியில் இருந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்திலேயே அந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.
சில மாதங்களில் முறிந்து போன இந்தப் பேச்சுக்களில், சிறிலங்கா அரசாங்க குழுவில் இடம்பெற்றிருந்தவர் பிரிகேடியர் சிறி பீரிஸ்.
பேச்சுக் குழுவுக்கு இராணுவ விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்குவதற்கான பணியில் இவர் ஈடுபட்டிருந்தார்.
அப்போதைய பேச்சுக்கள் முறிந்து போனமைக்கு, பூநகரி இராணுவத் தளத்தை அகற்றுமாறு விடுக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கோரிக்கை செவிசாய்க்கப்படாமை முக்கிய காரணமாக அமைந்தது.
பிரிகேடியர் சிறி பீரிஸ், பின்னர் மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றதுடன், ஆட்டிலறிப் படைப்பிரிவின் தளபதியாகவும், 1998இல் பதவி வகித்திருந்தார்.
34 ஆண்டுகள் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தனது 72ஆவது வயதில், கடந்த 3ஆம் நாள் கொழும்பில் மரணமானார்.