மகிந்தவை பிரதமர் வேட்பாளராக மைத்திரி ஏற்கவில்லை – அதிபர் செயலகம் அறிக்கை
மகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அங்கீகரிக்கவோ அல்லது, பிரதமர் வேட்பாளராகப் பெயரிடவோ இல்லை என்று சிறிலங்கா அதிபர் செயலகம் இன்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படமாட்டார்கள்.
கட்சியின் தலைவர் என்ற வகையில் அதிபர் மைத்திரிபால சிறிசேன, எந்தவொரு வேட்பாளரையும், பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து முடிவை எடுக்கவோ, எவருடனும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளவோ, இல்லை.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் வெற்றி பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னரே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் யார் என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அறிந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே மைத்திரிபால சிறிசேனவின் இந்த முடிவு கண்டியில் வைத்து, நிமால் சிறிபால டி சில்வாவினால், மகிந்த ராஜபக்சவிடம், அதிகாரபூர்வமாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்றிரவு தனது அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆதரவாளர்களுடன் மகிந்த ராஜபக்ச ஆலோசனை நடத்தவுள்ளார்.
அதன் பின்னர், நாளை காலை மெதமுலானவில் வைத்து, தனது எதிர்காலத் திட்டத்தை அவர் அறிவிக்கவுள்ளார்.