கட்டுப்பணம் கையேற்கிறது சிறிலங்கா தேர்தல் திணைக்களம்
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிடம் இருந்து கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடம் இருந்து, வார நாட்களில் மட்டுமே கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும், வரும் ஜூலை 13ஆம் நாள் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களை விரைவாக கட்டுப்பணம் செலுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.
மாவட்டச் செயலகங்களில் கட்டுப்பணத்தைச் செலுத்த முடியும். சுயேட்சை வேட்பாளரிடம் இருந்து 2000 ரூபா கட்டுப்பணம் பெறப்படுவது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வரும் ஜூலை 06ஆம் நாள் தொடக்கம் சமர்ப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இன்று மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.