மேலும்

போரில் கணவனை இழந்த பெண்கள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் அவலம் – ஏஎவ்பி

sri-lankas-war-widows (1)சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் நிறைவுற்று ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தப் போரின் போது தமது கணவன்மாரை இழந்து தவிக்கும் பெண்களின் நிலை இன்னமும் முன்னேற்றம் அடையவில்லை.

குறிப்பாக யுத்தத்தின் போது கணவன்மாரை இழந்து தவிக்கும் பெண்களின் எண்ணிக்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. இந்தப் பெண்கள் இவர்களது சொந்த மக்களால் கூட மதிக்கப்படாத நிலை காணப்படுகின்றது.

இதனால் இவர்களில் சிலர் தமது குடும்பத்தைப் பராமரிப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவின் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்ற போது பாதிக்கப்பட்ட இந்தப் பெண்கள் மத்தியில் தமது வாழ்வின் மீது புதியதொரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

sri-lankas-war-widows (4)

பாஸ்கரன் ஜெகதீஸ்வரி (படம்- ஏஎவ்பி)

‘எமது சமூகத்தில் என் போன்ற கணவனை இழந்து வாழும் பெண்கள் இகழ்ச்சியாக நோக்கப்படுகின்றனர்’ என 50 வயதான பாஸ்கரன் ஜெகதீஸ்வரி கூறுகிறார். இவர் யாழ்ப்பாணத்திலுள்ள அச்சுவேலி என்னும் கிராமத்தில் வசிக்கிறார். இவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட போது இவரது கண்கள் கண்ணீரால் நிரம்பின.

‘மக்கள் எம்மைத் தரக்குறைவாகப் பார்க்கின்றனர். நாங்கள் நல்வாய்ப்பற்றவர்கள் என அவர்கள் நினைக்கின்றனர்’ என 2009ல் யுத்தம் முடிவிற்கு வருவதற்கு ஒரு மாதத்தின் முன்னர் எறிகணை வீச்சொன்றில் கணவனை இழந்து வாழும் ஜெகதீஸ்வரி கூறுகிறார்.

போரில் கணவன்மாரை இழந்த அல்லது காணாமற் போனவர்களின் மனைவிமார் தற்போது சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன தமக்காக ஏதாவது செய்வார் என்ற ஏக்கத்துடன் வாழ்கின்றனர்.

இவ்வாண்டு ஜனவரியில் ‘உடைந்த மனங்களையும் உணர்வுகளையும்’ ஆற்றுப்படுத்துவதற்கான மீளிணக்கப்பாட்டை முன்னெடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் மூலம் சிறிலங்காவின் அதிபராக மைத்திரிபால சிறிசேன மக்களால் தெரிவுசெய்யப்பட்டார்.

போரின் மிக மோசமான தாக்கத்திற்கு உள்ளாகிய யாழ்ப்பாணத்தில் 27,000 வரையான கணவனை இழந்த பெண்கள் உள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

sri-lankas-war-widows (2)

எவின் செல்வி (படம்- ஏஎவ்பி)

‘எனது வாழ்வை தற்போது மீளக்கட்டியெழுப்புவதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை’ என பண்ணையொன்றில் நாளாந்தம் ரூ500 மட்டுமே சம்பாதிக்கும், கணவனை இழந்த எவின் செல்வி கூறுகிறார்.

‘ஆனால் எனது மூன்று மகள்களின் வாழ்வைச் சிறப்பாக்குவதற்கு புதிய அரசாங்கம் பயனுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என நான் நம்புகிறேன்’ என்கிறார் செல்வி.

பல்வேறு இடங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்த செல்வி 2009ல் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறினார். இவர் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய போது இவரது வீடும் இவரது கிராமமும் யுத்தத்தால் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

1990ல் செல்வியும் கணவரும் அவர்களது சொந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்தனர். பின்னர் போரின் இறுதி மாதங்களில் செல்வியின் கணவர் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் படுகொலை செய்யப்பட்டார்.

45 வயதான செல்வியும் இவரது மூன்று பெண்பிள்ளைகளும் யாழ்ப்பாணத்திலுள்ள தமது சொந்தக் காணியில் சிறியதொரு குடிசை அமைத்து வாழ்கின்றனர். செல்வி தனது வீட்டைப் பகுதியளவில் திருத்தியுள்ளார்.

இதற்கான ஒரு தொகுதி நிதி இந்திய அரசாங்கத்தால் யுத்தத்தில் கணவன்மாரை இழந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கென வழங்கப்பட்டதாகும். மிகுதி வீட்டைத் திருத்துவதற்கு இவருக்கு இன்னமும் ரூ.200,000 தேவைப்படுகிறது.

சிறிலங்கா இராணுவத்தினருக்கும் தமிழ்ப் புலிகளுக்கும் இடையில் 1972-2009 வரையான காலப்பகுதியில் தொடரப்பட்ட யுத்தத்தின் போது குறைந்தது 100,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இன்னமும் சில ஆயிரக்கணக்கான மக்களுக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த தமிழ்ப் புலிகள் மற்றும் பொதுமக்கள் பலருக்கு என்ன நடந்ததென்று தெரியாது.

கணவனை இழந்து தவிக்கும் பெண்கள் உளவியல் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். இவர்களது சொந்த சமூகத்தவர்கள் இவர்களைத் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுகின்ற போது இந்தப் பெண்களின் மனநிலை பாதிக்கப்படுகின்றது. இந்து சமய முறைப்படி கணவன்மாரை இழந்த பெண்கள் நல்ல காரியங்களுக்கு முன்நிற்பது கெட்ட சகுனம் எனக் கருதப்படுகிறது.

‘ஆயுதப் போர் 2009ல் முடிவுற்றுவிட்டது. ஆனால் புதிய சமூகப் பிரச்சினை ஒன்று தோற்றம் பெற்றுள்ளது. போரின் போது கணவன்மாரை இழந்த இளம் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்’ என யாழ்ப்பாணத்தில் வாழும் கணவன்மாரை இழந்த பெண்களுக்கு ஆதரவாகச் செயற்படும் சமூகப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இப்பணியாளர் தனது பெயரை வெளிப்படுத்த மறுத்துவிட்டார்.

sri-lankas-war-widows (3)

சமூகப் பணியாளர் தர்சினி சந்திரன் (படம் – ஏஎவ்பி)

‘இந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் தமக்கான தொழில்வாய்ப்பொன்றைப் பெற்றுக் கொள்வதில் மிகுந்த பிரயத்தனப்படுகின்றனர். இவர்களில் சிலர் பலாத்கார விபச்சாரத்திற்குள் உள்வாங்கப்படுகின்றனர்’ என பிறிதொரு சமூகப் பணியாளரான தர்சினி சந்திரன் தெரிவித்தார்.

‘கணவன்மாரை இழந்த பெண்களுக்கு எமது சமூகத்தில் நல்லதொரு நிலை வழங்கப்படவில்லை’ என 1700 கணவனை இழந்த பெண்களின் குழுவொன்றுக்குத் தலைமை தாங்கும் கிறிஸ்ரின் மனோகரன் தெரிவித்தார்.

‘ஆண்கள் எம்மைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துகின்றனர். எமக்கென எவ்வித பாதுகாப்புமில்லை’ என 34 வயதான கணவனை இழந்து வாழும் மனோகரன் தெரிவித்தார்.

‘குடும்ப நண்பர்கள் கூட எமது சூழலைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். பணம் மற்றும் வேறு உதவிகளைத் திருப்பிக் கொடுக்க முடியாதவிடத்து எம்மைத் தமது பாலியல் இச்சைக்குப் பயன்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.

இதேபோன்று போக்குவரத்தின் போது தனியாகப் பயணிக்கும் போது கூட இவ்வாறான சில பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையில் கணவன்மாரை இழந்த பெண்கள் உள்ளனர்’ என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.

கணவன்மாரை இழந்த சில பெண்களை சிலர் மறுமணம் செய்ய முன்வருகின்ற சம்பவங்களும் இடம்பெறுவதாக ஆர்வலரான மரியரோசா சிவராசா தெரிவிக்கிறார்.

ஆனாலும் கணவன்மாரை இழந்து தனிமையில் வாழும் பெண்கள் சிலர் அவர்களது சொந்தக் கிராமங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு நகரங்களில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்ற சம்பவங்களும் இடம்பெறுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினரான, 43 வயதான அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

இவ்வாறான பல்வேறு பிரச்சினைகளை கணவன்மாரை இழந்து தனிமையில் வாடும் பெண்கள் சந்திக்கின்ற போதிலும் சிறிலங்காவின் புதிய அதிபர் சிறிசேன இந்த விடயத்தில் பல்வேறு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பார் எனத் தான் நம்புவதாகவும் சிறிசேன அரசாங்கம் நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான சாதகமான சமிக்கைகளை காண்பிப்பதாகவும் அனந்தி தெரிவித்தார்.

ananthi

அனந்தி சசிதரன் ( படம் – ஏஎவ்பி)

‘இவர் ஒரு சாதாரணமான மனிதர் போல் மக்களுடன் பழகுகிறார். எந்தவொரு பிரச்சினைகளையும் நாங்கள் அதிபர் சிறிசேனவுடன் நேரடியாகக் கலந்துரையாட முடியும் என நான் நம்புகிறேன்’ என அனந்தி தெரிவித்தார்.

சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் ஆகஸ்ட்டில் புதிய தேர்தல் நடாத்தப்படும் எனவும் வெள்ளியன்று சிறிசேன அறிவித்துள்ளார்.

போரின் போது மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீளவும் கையளிக்கப்படும் நிகழ்வுகள் வடக்கில் இடம்பெறுகின்றன. ஐ.நா வல்லுனர்களால் முன்வைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணையை முன்னெடுக்கவுள்ளதாக சிறிசேன வாக்குறுதி அளித்துள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக விசாரணையை மேற்கொள்வதற்கான ஒப்புதலை சிறிசேன வழங்கியுள்ளார்.

இவருக்கு முன்னர் நாட்டை ஆண்ட மகிந்த ராஜபக்ச கடும்போக்கு அதிபராகக் காணப்பட்டார். நாட்டில் உள்நாட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என மேற்குலக நாடுகள் கோரிய பொது அதனை ராஜபக்ச எதிர்த்து நின்றார். தமிழ் மக்களுடன் நல்லுறவைப் பேணத் தவறியவர் என ராஜபக்ச மீது அனைத்துலக சமூகம் குற்றம் சுமத்தியது.

சிறிசேனவின் ஆட்சியின் கீழ் பல்வேறு போக்குவரத்துத் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடக்கிற்கான போக்குவரத்தின் போது ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட கடும்போக்கு நடைமுறைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

தமிழ்ப் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கணவனை இழந்த பெண்கள் மீது சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பெண்கள் புலனாய்வாளர்களால் துன்புறுத்தப்பட்டனர். ஆனால் தற்போது இவ்வாறான சித்திரவதைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான சில முன்னேற்றங்கள் உள்ள போதிலும் நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு இன்னமும் முக்கிய பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என கணவன்மாரை இழந்து தனித்து வாழும் தமிழ்ப் பெண்களும் தமிழ் சமூகத்தினர் கருதுகின்றனர்.

குறிப்பாக வடக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் அகற்றப்பட வேண்டும் என இவர்கள் வலியுறுத்துகின்றனர்.

‘இவற்றை நாட்டின் புதிய அதிபர் மாற்றியமைக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்’ என பெண்கள் நலன்பேண் ஆர்வலர் சிவராசா தெரிவித்தார்.

ஆனால் பல பத்தாண்டுகாலத் துன்ப துயரங்களின் பின்னர், இவ்வாறான சில பிரச்சினைகளிலிருந்து மிக வேகமாக மீள்வதென்பது சாத்தியமற்றதாகும்.

ஆங்கிலமூலம் – அமால் ஜெயசிங்க
வழிமூலம் – ஏஎவ்பி
தமிழ் மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *