ஜூலை 1இல் அதிகாரபூர்வ முடிவை மெதமுலானவில் வைத்து அறிவிக்கிறார் மகிந்த
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தனது அதிகாரபூர்வ நிலைப்பாட்டை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரும் ஜூலை 1ஆம் நாள் அறிவிக்கவுள்ளார். மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்று மகிந்த ராஜபக்ச வரும் ஜூலை 1ஆம் நாள் காலை 10 மணியளவில், மெதமுலானவில் வைத்து அறிவிப்பார் என்று அவர் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச போட்டியிடுவது தொடர்பாக பல்வேறு ஊடகங்களிலும், பல்வேறு அரசியல்வாதிகளும் வெளியிட்டு வரும் தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, தாம் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும், ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கு மகிந்த ராஜபக்சவின் பதில் ஜூலை 1ஆம் நாள் வெளிவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், மெதமுலானவில் தனது நிலைப்பாட்டை மகிந்த ராஜபக்ச செய்தியாளர் சந்திப்பிலா, அல்லது பொதுக்கூட்டத்திலா அறிவிப்பார் என்பதை, ரொகான் வெலிவிட்ட தெரிவிக்கவில்லை.
அதேவேளை, மகிந்த ராஜபக்ச நிச்சயம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்றும் அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது என்றும், முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.