நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4 பில்லியன் ரூபா செலவு
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4 பில்லியன் ரூபா செலவாகும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர்,
“இம்முறை நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4 மில்லியன் ரூபா செலவாகும். தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கான கொடுப்பனவுகள், போக்குவரத்து, மற்றும் அச்சிடும் செலவுகளுக்கே, 4பில்லியன் ரூபா தேவைப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதாம் நடத்தப்பட்ட அதிபர் தேர்தலுக்கு 3 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது.
அரசாங்க பணியாளர்கள் தேர்தல் சட்டங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.
அரசாங்க வளங்களை தேர்தலுக்குப் பயன்படுத்தினால், அரச பணியாளர்கள் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்படும்.
19ஆவது திருத்தச்சட்டம் தேர்தல் ஆணையாளருக்கு மேலதிகமான அதிகாரங்களை வழங்கியுள்ளது. தண்டனையை எதிர்கொள்வதை விட அரசபணியாளர்கள் தமது கடமையை சரிவரச் செய்ய வேண்டும்.
எந்தவொரு அதிகாரியையும் தண்டிக்க வேண்டிய தேவை எமக்கில்லை. ஆனால் அவர்களுக்கான பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்று நினைவுபடுத்துகிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.