மேலும்

சிறிலங்காவில் ஓகஸ்ட் 17இல் நாடாளுமன்றத் தேர்தல் – 10 நாட்களில் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்

elections_secretariatசிறிலங்காவின் ஏழாவது நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ள நிலையில், எட்டாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் ஓகஸ்ட் 17ம் நாள்- திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை 6 மணியளவில், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் கையெழுத்திட்டு, அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.

நேற்று ஜூன் 26ஆம் நாள் நள்ளிரவு தொடக்கம் ஏழாவது நாடாளுமன்றம் கலைக்கப்படுவதான இந்த சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கான உத்தரவு தமக்கு கிடைத்திருப்பதை நேற்றிரவு 8 மணியளவில் அரசாங்க அச்சகர் காமினி பொன்சேகா உறுதி செய்திருந்தார்.

இந்த நிலையில், நேற்றிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில், ஜூன் 26 நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும், புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியலை எதிர்வரும் ஜூலை 6ஆம் நாள் தொடக்கம், 13ஆம் நாள் நண்பகல் 12 மணி வரை சமர்ப்பிக்க முடியும்.

புதிய நாடாளுமன்றம் செப்ரெம்பர் 01ஆம் நாள் கூடும் என்றும் சிறிலங்கா அதிபரின் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியலை சமர்ப்பிக்க இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில், சிறிலங்கா அரசியல் சூடுபிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, வேட்பாளர் பட்டியல் சமர்ப்பிக்க வேண்டிய கால எல்லை தொடர்பாக ஊடகங்களில் குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன. சில ஊடகங்கள் ஜூலை 8ஆம் நாள் ஆரம்பமாவதாகவும் முடிவு நாள் ஜூலை 15 என்றும்  குறிப்பிட்டுள்ளன.

எனினும், அரசாங்க வர்த்தமானியில், வேட்பாளர் பட்டியலை எதிர்வரும் ஜூலை 6ஆம் நாள் தொடக்கம், 13ஆம் நாள் நண்பகல் 12 மணி வரை சமர்ப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *