பாகிஸ்தானிடம் 14 போர் விமானங்களை வாங்க சிறிலங்கா கொள்வனவுக் கட்டளை
சிறிலங்கா விமானப்படைக்கு ஒரு ஸ்குவாட்ரன் (14 விமானங்கள்) ஜேஎவ்-17 போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான கொள்வனவு கட்டளைக் கடிதம், சிறிலங்கா அரசாங்கத்தினால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த போர் விமானங்கள் சிறிலங்கா விமானப்படையில் அடுத்த ஆண்டு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில், சிறிலங்கா விமானப்படை விமானிகளுக்கும் தொழில்நுட்பவியலாளர்களுக்கும் பாகிஸ்தான் பயிற்சி அளிக்கும்.
2013ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கடன் உடன்பாட்டுக்கு அமையவே இந்த போர் விமானங்களை சிறிலங்கா கொள்வனவு செய்யவுள்ளது என்றும் பாகிஸ்தான் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, பாகிஸ்தானிடம் இருந்து ஜேஎவ்-17 போர் விமானங்களை சிறிலங்கா விமானப்படை கொள்வனவு செய்யவுள்ளதாக வெளியான செய்தியை சிறிலங்கா விமானப்படை மறுத்திருந்தது.
இந்த கொள்வனவு தொடர்பாக இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா விமானப்படை பேச்சாளர் கூறியிருந்த நிலையில், கொள்வனவுக்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.