புலம்பெயர்ந்தோர் விழாவுக்கு நிதி ஒதுக்கவில்லை – ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த ஆண்டு இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ள புலம்பெயர்ந்தோருக்கான விழாவுக்கு, தாம் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிதி ஒதுக்கீட்டிலேயே இந்த விழாக்கள் நடத்தப்படவுள்ளதாக, வெளியான செய்தியை, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் மறுத்துள்ளார்.
“இதுமுற்றிலும் தவறதான செய்தி. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவோ அல்லது ஐ.நா மனித உரிமைகள் பேரவையோ இத்தகைய விழாக்கள் எதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.” என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
நேற்றுமுன்தினம் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிசாந்த சிறீவர்ணசிங்க, புலம் பெயர்ந்தோர் விழாக்களை நடத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை 3.2 மில்லியன் டொலரை ஒதுக்கியிருப்பதாகவும், இதற்கான காரணம் குறித்து சந்தேகங்கள் எழுவதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.