20ஆவது திருத்தச்சட்டத்தை தோற்கடிப்போம் – ரணில் வாக்குறுதி
சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவத்துக்கு அச்சுறுத்தலாகவும், இருகட்சி முறைக்கு இட்டுச் செல்வதாகவும் இருந்தால், 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று அலரி மாளிகையில், சிறு மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த உறுதிமொழியை அளித்துள்ளதாக, ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் சிறு மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக தாம் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு ஆதுரவு அளிப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன், மேல் மாகாண மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க மற்றும் லால்காந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா பிரதமருடன் அமைச்சர் கபீர் ஹாசிமும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.