20ஆவது திருத்தம் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டது
தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான யோசனை, நேற்று நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்க அச்சகர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான ஆங்கில மொழி மூலமான வர்த்தமானி அறிவிப்பு நள்ளிரவில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், சிங்கள, மற்றும் ஆங்கில மொழி மூல வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று நண்பகலுக்கு முன்னர் பிரசுரிக்கப்படும் என்றும் அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 12ம் நாள், நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் முன்மொழியப்பட்ட 237 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான யோசனையே வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்ட இந்த யோசனையின் படி, 145 உறுப்பினர்கள் தொகுதிவாரியாகவும், 55 உறுப்பினர்கள் மாவட்ட ரீதியில் விகிதாசார முறைப்படியும், 37 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலமும் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவர்.
எனினும், இந்த யோசனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறு மற்றும் சிறுபான்மையினக் கட்சிகள் நிராகரித்துள்ளன.
ஐதேகவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.