சிறிலங்காவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்த இந்தியா திட்டம் – 23 ஆயிரம் கோடி ரூபா செலவாகும்
இந்தியாவையும் சிறிலங்காவையும் தரைவழிப் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டத்தை இந்திய அரசாங்கம் கொண்டிருப்பதாக இந்தியாவின் தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
கடலுக்கு மேலாக அமைக்கப்படும் பாலம் மூலமோ அல்லது கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை மூலமோ, பாக்கு நீரிணை ஊடாக தரைவழிப்பாதை இணைப்பை ஏற்படுத்துவது சாத்தியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
“கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டாலும் கூட, அதற்கு மேலாக கப்பல்கள் பயணம் செய்ய முடியும்.
தனுஸ்கோடிக்கும், சிறிலங்காவின் எல்லைக்கும் இடையிலான தூரம் 23 கி.மீ மட்டுமே.
இந்த கடல் பாலம் சார்க் போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்தும்.
பாக்கு நீரிணைக்கு மேலாக தரைப்பாலம் மற்றும் தொடருந்துப்பாதையை அமைப்பதற்கான திட்டம் ஒன்று, சாத்திய ஆய்வு மற்றும் நிதியிடல் தொடர்பான பரிசீலனைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் இந்த திட்டத்துக்கு சுமார் 23 ஆயிரம் கோடி ரூபா தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா- சிறிலங்காவுக்கு இடையில் இணைப்பை ஏற்படுத்துவது மட்டுமன்றி, மியான்மார் வழியாக, வடகிழக்கு இந்தியாவை தாய்லாந்துடன் இணைக்கும் தரைப்பாதையை அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் நிதின் கட்ரி தெரிவித்துள்ளார்.