பசிலுக்கு பிணை வழங்கியது கொழும்பு மேல் நீதிமன்றம்
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு இலட்சம் ரூபா ரொக்க பிணை மற்றும் நான்கு பேரின் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளுடன் பசில் ராஜபக்சவை விடுவிக்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன உத்தரவிட்டுள்ளார்.
பிணையாளர்கள் அரசாங்க பணியாளர்களாகவும், நெருங்கிய உறவினர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றினால் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், பசில் ராஜபக்ச கடந்த ஏப்ரல் 22ம் நாள் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவருடன் கைது செய்யப்பட்ட, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலர் நிஹால் ஜயதிலக மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஏ.கே. ரணவக்க, திவிநெகும வங்கியின் முன்னாள் தலைவர் பி.பீ. திலகசிறி ஆகியோரும் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.