மேலும்

முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க வடக்கு மாகாணசபைக்கு அனுமதி அளித்தார் மைத்திரி

MS_CMமுதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க வடக்கு மாகாணசபைக்கு அனுமதி அளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று சிறிலங்கா அதிபருக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போதே, இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாகாணங்களினதும் முதலமைச்சர்களை சிறிலங்கா அதிபர் நேற்றிரவு சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன்,  அவர் தனியாகப் பேச்சுக்களை நடத்தினார்.

இதன் போதே, முதலமைச்சர் நிதியத்தின் அவசியம் குறித்து சிறிலங்கா அதிபரிடம், சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துக் கூறினார்.

அனைத்துலக நாடுகளதும் புலம்பெயர்ந்த எமது மக்களதும் நிதியுதவிகளைப் பெற்று வடபகுதியைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளதால், முதலமைச்சர் நிதியம் ஊடாக அதனை மேற்கொள்ள முடியும்.

கடந்த ஆட்சியில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிதியம் அமைக்கப்பட்டால் அதனை மத்திய அரசே கணக்காய்வு செய்யும் விதத்தில் அரசு நடவடிக்கை எடுக்க முடியும்.

அதற்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம். இதனால் உடனடியாக முதலமைச்சர் நிதியம் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அதற்கு சிறிலங்கா அதிபர், முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கான உதவிகள் வழங்கப்படுமெனவும் உறுதியளித்தார்.

அதேவேளை, 30 ஆண்டுகாலப் போரால் வடக்கு மாகாணம் மிகப்பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதால், அதனைப் பழைய நிலைக்கு கட்டியெழுப்ப பெருமளவு நிதி தேவைப்படுகிறது.  தற்போது வட பகுதிக்கு ஒதுக்கப்படும் நிதி போதாது. பெருமளவு நிதி வழங்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை வடக்கு மாகாணசபையைப் புறக்கணித்து விட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரைத் தனியாக தெற்கிற்கு அழைத்து நிதி வழங்கப்பட்டுள்ளது. இது எங்களுக்குள் பிரிவை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதெனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறிலங்கா அதிபர், இதுபற்றி உடனடியாக ஆராய்வதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *