சிறிலங்கா இராணுவத்துக்கு குதிரைகளை அன்பளிப்பு செய்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு எட்டு குதிரைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
நேற்றுப் பிற்பகல் தியத்தலாவவுக்கு சென்ற பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீபுக்கு அங்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
சிறிலங்கா இராணுவத்தின் பயிற்சிப் பிரிவுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் மனோ பெரேரா, தியத்தலாவ பயிற்சி முகாம் தளபதி பிரிகேடியர் ராஜகுரு ஆகியோர் பாகிஸ்தான் இராணுவத் தளபதியை வரவேற்றனர்.
இதையடுத்து நடந்த நிகழ்விலேயே சிறிலங்கா படையினரின் பயிற்சிக்குத் தேவையான எட்டு உயர் ரக குதிரைகளையும், பிரிகேடியர் ராஜகுருவிடம், பாகிஸ்தான் தளபதி கையளித்தார்.
அண்மையில் இந்தக் குதிரைகளை ஏற்றி வந்த சிறிலங்கா விமானப்படை விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து இந்தியாவின் புனே விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், கொழும்புக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.