மேலும்

காவல்துறையினரை கல்எறிந்து கொல்லப்போவதாக எச்சரித்த மகிந்தவின் சகாவிடம் விசாரணை

D.V.-Upulமகிந்த ராஜபக்ச பிரதமரானதும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் கல் எறிந்து கொல்லப்படுவர் என்று எச்சரித்த, தென்மாகாண அமைச்சர் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் உரையாற்றிய, தென்மாகாண மீன்பிடி அமைச்சர் டி.வி.உபுல்,

“நிதிக்குற்ற விசாரணைப்பிரிவில் பணியாற்றும் காவலர் தொடக்கம் பிரதிக் காவல்துறை மா அதிபர் வரையான பட்டியல் சேகரிக்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச பிரதமரானதும் இவர்கள் அனைவரும் கல் எறிந்து கொல்லப்பட வேண்டும். அந்த நாளுக்காக நாம் காத்திருக்கிறோம்” என்று மேடையில் உரையாற்றியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான இவர், ராஜபக்ச குடும்பத்தினரிடம் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு நடத்தும், விசாரணைகளால் கோபமுற்றே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது உரை நேற்று ஊடகங்களில் வெளியானதையடுத்து, சிறிலங்கா காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தென்மாகாண அமைச்சர் உபுல் விடுத்த இந்த அச்சுறுத்தல்  அறிக்கை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

காவல்துறையை அச்சுறுத்தும் வகையில் அறிக்கை விடுத்த அவர் கைது செய்யப்படக் கூடும். அவரிடம் முதலில் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்படவுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *