இரண்டாவது மீட்புக் குழுவை பயணிகள் விமானத்தில் அனுப்பியது சிறிலங்கா
நிலநடுக்கத்தினால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு, 97 சிறிலங்கா படையினரையும், 17 தொன் எடையுள்ள அத்தியாவசியப் பொருட்களையும் ஏற்றிய இரண்டாவது விமானம் இன்று சிறிலங்காவில் இருந்து காத்மண்டு சென்றது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் மூலமே, மீட்புக் குழுவினரும், உதவிப்பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முதலாவது தொகுதி, மீட்புக் குழுவினரும், உதவிப் பொருட்களும், சிறிலங்கா விமானப்படையின் சி-130 விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
எனினும், அந்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால், உடனடியாகத் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது,
நேற்று பிற்பகலிலேயே அந்த விமானம் கொழும்பு திரும்பிய நிலையில், இம்முறை சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் மூலம், மீட்புக் குழுவினரும், உதவிப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று காத்மண்டு சென்றுள்ள மீட்புக் குழுவில் 72 இராணுவத்தினர், 14 கடற்படையினர், 11 விமானப்படையினர் உள்ளடங்கியுள்ளனர்.
ஏற்கனவே, 4 மருத்துவர்களும், 44 சிறிலங்கா இராணுவத்தினரும். காத்மண்டுவில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில் மீட்பு மற்றும் உதவிப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இரண்டாவது குழு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.