215 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது 19வது திருத்தம்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சிறிலங்கா அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டம் சற்று முன்னர், 215 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
225 பேர் கொண்ட சிறிலங்கா நாடாளுமன்றத்தில், 19வது திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஒரு உறுப்பினர் மட்டும் வாக்களித்துள்ளார். ஒருவர் நடுநிலை வகித்திருந்தார். 7 பேர் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை.
முந்திய செய்தி
அரசியலமைப்பின் 19வது திருத்தம் மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆரம்பித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்திய உரையை அடுத்து, வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அழைக்கப்பட்டு வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
ஐதேக மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் 19வது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளனர்.
மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான உறுப்பினர்களும் வாக்களிக்கமுடிவு செய்துள்ளனர். நாமல் ராஜபக்ச 19வது திருத்தத்துக்கு ஆதரவாக தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்.
அதேவேளை, முன்னாள் கடற்படை அதிகாரியும், முன்னாள் பிரதி அமைச்சருமான, சரத் வீரசேகர எதிர்த்து வாக்களித்துள்ளார்.இவரே 19வது திருத்தத்தை எதிர்த்து வாக்களித்த முதல் சுதந்திரக் கட்சி உறுப்பினராவார்.
அதேவேளை, முன்னிலை சோசலிசக் கட்சியில் இணைந்து கொண்ட ஜேவிபி உறுப்பினர் அஜித் குமார் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கியிருக்க முடிவு செய்துள்ளார்.