மூன்றாவது வாசிப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது 19வது திருத்தச்சட்டம்
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றிரவு நடந்த குழுநிலை விவாதங்களுக்குப் பின்னர், 19வது திருத்தச்சட்டத்தின் மூன்றாவது வாசிப்பு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, இரண்டாவது வாசிப்பு மாலை 7 மணியளவில் நடைபெற்ற போது, அதற்கு 215 உறுப்பினர்கள் ஆதரவாகவும் ஒருவர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.
இதையடுத்து, மூன்றாவது வாசிப்பின் மீது குழுநிலை விவாதம் இடம்பெற்றது. இதன்போது, எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் உட்சேர்க்கை செய்யப்பட்டன.
அதையடுத்து, இரவு 11 மணியளவில் மூன்றாவது வாசிப்பின்போது, நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 212 வாக்குகள் 19வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக அளிக்கப்பட்டன. ஒரே ஒரு வாக்கு மட்டும் எதிராக அளிக்கப்பட்டது.
அதேவேளை, 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை. ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதையடுத்து, 19வது திருத்தச்சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டதாக, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்காவின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம் என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, உரையாற்றிய போது, நிறைவேற்று அதிகாரத்தைக் குறைப்பது போலவே, தேர்தல் முறை மாற்றத்தையும் மக்கள் விரும்புவதாகவும், அதனையும் கூடிஎய விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.