துப்பாக்கியுடன் மைத்திரியை நெருங்கிய இராணுவ கோப்ரல் – நாமலிடமும் விசாரணை
அம்பாந்தோட்டையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு வளையத்தை, நாமல் ராஜபக்சவின் மெய்க்காவலர் துப்பாக்கியுடன் ஊடறுத்து நுழைந்த விவகாரம் குறித்து, நாமல் ராஜபக்சவிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ள அங்குனுகொலபெலஸ்ஸவில் கடந்த சனிக்கிழமை நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில், நாமலின் மெய்க்காவலரான இராணுவ கோப்ரல் கைத்துப்பாக்கியுடன், மைத்திரிபால சிறிசேனவை நெருங்கியிருந்தார்.
அதிபர் பாதுகாப்புப் பிரிவினால் சோதனையிடப்படாமல், இவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அருகில் செல்ல அனுமதிக்கப்பட்ட சம்பவத்தை, அங்கிருந்த சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கண்டு, சோதனையிட்ட போது, அவரிடம் கைத்துப்பாக்கி இருந்த்து கண்டறியப்பட்டது.
நாமல் ராஜபக்சவின் மெய்க்காவலராகப் பணியாற்றும் அவர் இராணுவ கொமாண்டோ படைப்பரிவைச் சேர்ந்தவராவார்.
இந்தச் சம்பவம் பெரும் பாதுகாப்பு குறைபாடாக கருதப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
1999ம் ஆண்டு சிறிலங்கா அதிபராக இருந்த சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாப்பு வளையத்துக்குள் நுழைந்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பு வளையம் ஊடறுக்கப்பட்ட முதல் சம்பவமாக இது கருதப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, நாமல் ராஜபக்சவிடமும். விசாரணை நடத்தப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா காவல்துறையே பாதுகாப்பு வழங்கும் நிலையில், நாமல் ராஜபக்ச கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்தவரை, மெய்க்காவலராக வைத்திருந்தது குறித்து, விசாரணை நடத்தப்படவுள்ளது,
நாமல் ராஜபக்சவின் சாரதியாகவும், இராணுவச் சிப்பாய் ஒருவரே பணியாற்றுகிறார். இதுகுறித்தும் விசாரிக்கப்படும் என்று தெரியவருகிறது.
அத்துடன், பாதுகாப்பு வளையத்தை ஊடறுத்து நுழைந்த இராணுவ கொமாண்டோவை, அதிபர் பாதுகாப்புப் பிரிவு விடுதலை செய்தது குறித்தும், குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தவுள்ளது.