கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் பசில் ராஜபக்ச
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, கொழும்பு தேசிய மருத்துவமனையின் கட்டண விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்காகச் சென்ற பசில் ராஜபக்ச, ஆறு மணிநேர விசாரணையின் பின்னர், நேற்று மாலை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டார்.
கடுவெல நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவரை மே 05ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து, வெலிக்கடைச் சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நேற்று அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, மருத்துவ சிகிச்சைக்காக பிணை வழங்குமாறு சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.
ஆனால், பொதுச்சொத்துகள் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், அவருக்கு பிணை வழங்க முடியாது என்று கடுவெல நீதிபதி, அந்தக் கோரிக்கையை நிராகரித்திருந்தார்.
இந்தநிலையில், வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட பசில் ராஜபக்ச, தம்மை கொழும்பு தேசிய மருத்துவமனையின் கட்டண விடுதியில் அனுமதிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளிடம் அனுமதி கோரினார்.
அதையடுத்து, இன்று பிற்பகல் பசில் ராஜபக்ச கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.